நமது பண்பாட்டில் மருத்துவம்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

நமது பண்பாட்டில் மருத்துவம்...........



உலகமயமாக்கம் என்றால் "பொருளாதார நடவடிக்கை" என்றுதான் பத்திரிகை படிப்பவர்களும் மெத்தப் படித்தவர்களும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் உலகமயமாக்கல் என்பது கலாச்சாரத் தாக்குதலாக இருக்கிறது. 

     பன்னாட்டு மூலதனம் இப்பொழுது என்ன செய்கிறது என்றால், தான் எந்தெந்த நாடுகளிலெல்லாம் கொள்ளையடிக்கப்போகிறதோ அங்கெல்லாம் முதலில் பண்பாட்டு வன்முறையை ஏவுகிறது.

        பண்பாட்டு வன்முறை மிகவும் நுட்பமானது. உதாரணமாக தினத்தந்தியிலே சுக்குக்கு என்ன பயன், மிளகுக்கு என்ன பயன், தூதுவளைக்கு என்ன பயன் என்று ஒரு சின்ன இடத்திலே போடுவார்கள். அதற்கு அவர்கள் தரும் பெயர் 'பாட்டி வைத்தியம்'.

இதன் மரபுச் சொல் 'கை மருத்துவம்' அல்லது 'வீட்டு மருத்துவம்'. இச்சொல்லுக்குரிய பாரம்பரியமான அறிவுத்தொகுதி என்னுடைய வீட்டிலேயே பிறந்த எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் பங்கிடப்பட்டிருக்கிறது முந்தைய சமூதாயத்திலே ..! என் சகோதரிக்கும் என் மனைவிக்கும் என் மகளுக்கும் அதில் சிறு துளி தெரியும். 
அதை ஏன் 'பாட்டி வைத்தியம்' என்று சொல்கிறார்களென்றால் அது ஒரு வன்முறையான சொல்லாடல். அச்சொல் ஒரு பண்பாட்டு வன்முறையாகும்.

       ஏனென்றால், பாட்டி எப்படி சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் சொல்ல முடியாதோ, அதுபோல இந்த மருத்துவமும் சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் செல்ல முடியாது. பாட்டி எப்படிப் பரிவோடு பார்க்கப்படவேண்டியவளோ, அதுபோல இந்த மருத்துவமும் பரிவோடு பார்க்கப்படவேண்டியது,  அவ்வளவுதான்.

    நாம் மிக ஆழமான வேர்களைக் கொண்ட ஆலமரம் போன்றவர்கள், நமது பண்பாட்டு வேர்கள் மிகவும்  வலுவானவை, நீளமானவை; மிகத்தொன்மையானவை......

             இந்தியாவினுடைய மற்ற பகுதிகளிளெல்லாம் இரும்புக்காலம் முடிந்து வெண்கலக்காலம் தொடங்குகிறது. ஆனால் இங்கு இரும்புக்காலம் தோன்றுகிறபோதே வெண்கலக்காலம் தோன்றியிருக்கிறது. தொல்லியல் ஆய்வாளர்கள், இந்தியாவிலேயே இரும்பை உருக்குகிற தொழிநுட்பம் தாமிரபரணிக் கரையைப் போல் எங்கும் சிறந்ததாக இல்லை என்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் நாம் மருத்துவம் பற்றிப் பேசலாம்.

        மருத்துவம் என்பதற்கான தமிழ் வேர்ச்சொல் 'மரு'. இச்சொல்லுக்குத் தமிழில் மணம் என்று பொருள். மருக்கொழுந்து என்றால் மணமுள்ள கொழுந்து என்று பொருள்.
எனவே இந்த மரு என்ற சொல் தாவரங்களை மணங்களாலே வகைப்படுத்துவதிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

          உணவாகட்டும், மருந்தாகட்டும் தாவரங்கள் எனும் நிலை உயிரிகளை அவற்றின் மணத்தைக் கொண்டே அறிவதென்பது மிகவும் நுட்பமானது. அறிவு என்பது எழுத்து மூலம் சார்ந்ததாகக் கருதக்கூடாது. அப்படிக்கருத வைத்தது ஐரோப்பிய மெய்காண் முறைமை. அதனால்தான் ஐரோப்பியர் எழுதத்தெரியாதவனெல்லாம் முட்டாள் என்று சொன்னார்கள்.

           நம் முன்னோர்களுடைய தாவரம் பற்றிய அறிவு பொய்யானதா.....?
அவர்களுடைய மருந்து பற்றிய அறிவு பொய்யானதா? உலகம் பற்றிய அறிவு, அவர்களது வாழ்வியல் விழுமியங்கள் பற்றிய தன்னுணர்ச்சி பொய்யானதா....?

      அறிவு என்பது எழுத்து மரபு சார்ந்தது. எழுத்து வருபவனுக்குத்தான் அறிவு வரும் என்பது ஒரு பொய். எழுத்து பிறப்பதற்கு முன்பே அறிவு பிறந்தது. எழுத்தப் படிக்கதெரியாத ஒருவன், ஓர் அழகான சிற்பத்தை ஆக்க முடியும்; ஒரு நாற்காலியைச் செய்யமுடியும். இது எழுத்து மரபு பிறப்பதற்கு முன்னால் பிறந்த அறிவு.

              இதைத்தான் காரல் மார்க்  "தொகுக்கப்படாத அறிவு" என்று சொல்வார்.
மருத்துவ அறிவு ஏனைய அறிவைவிட கூர்மையானதாக இருக்கவேண்டும். " மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் " என்பது சங்க இலக்கியம்.
இது (Professional Ethics) என்று சொல்லக்கூடிய தொழில் சார்ந்த அறம். தமிழ்ச் சமூகத்தில் இது வேறு யாரையும்விட மருத்துவம் செய்பவருக்கே அவருடைய தொழில்சார்ந்த அறம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

  வைதீகம் இங்கு முதல்நிலைப் பெற்றபோது மருத்துவம் தொழிலாக ஆகிறது.  அதுவரை மருத்துவனும் ஆசிரியனும் காசு பெறக்கூடாது.  மருந்தும் விற்பனைக்குரிய பொருளன்று என்ற எண்ணம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு வரை இருந்தது.

      12, 13 ஆம் நூற்றாண்டு வரை இன்னொரு நினைப்பும் இருந்தது. அது, சோறு விற்கக்கூடாது; நெல் விற்கலாம்; அரிசி விற்கலாம். வைதீகம் தமிழ்நாட்டை வென்றெடுத்த பிறகே சோற்றுக்கட்டியினை சத்திரங்களில் விற்க ஆரம்பித்தனர். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தண்ணீர் விற்கக்கூடாத பொருளாக இருந்தது. இது நம் பண்பாடு.
கி.பி.எட்டாம் நூற்றாண்டிலே மாறஞ்சடையன் என்கின்ற பாண்டியனுக்கு முதலமைச்சராக இருந்தவர் மருத்துவ சாதியைச் சார்ந்தவர். இவர் இறந்த பிறகு இவரின் தம்பி முதலமைச்சராகிறார். ( ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயில் கல்வெட்டு )
      அதற்குப் பின் வைதீகம் அரசைக் கையிலெடுத்துக்கொண்டதும் மருத்துவம் செய்கிற சாதி வெளியில் வைக்கப்பட்டது. மருத்துவக் காரணம் என்ற பெயரில் மருந்துப் பொருள்களின் மீது வரிவிதித்தனர் அரசர்கள். இது நம் பண்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.

   இன்னொரு செய்தி, சித்த மருத்துவத்தில் இரசவாதம் என்றும் ஆங்கிலத்தில் (Alchemy)  என்றும் சொல்லப்படுவது. கீழ் உலோகங்களை உயர்ப்த உலோகங்களாக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது. ஒரு பேரரசு உருவாகிறபோது அது பல நிகழ்வுகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். அரசுகள் அல்கெமி வளர்வதை விரும்பாது. ஏனென்றால், ஒருவன் இரும்பைத் தங்கமாக்குகிற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டால், ஒரே நாளில் அந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முடியும். எனவே அரசு அதை விரும்பாது. எனவே இந்த அரசியல் உருவானபோது அல்கெமி முழுமையாக அரசினாலே தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.
 அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை அணி திரட்டியவர்கள் சித்தர்கள். இவர்கள் நகர்புறத்துக்கு வரவே இல்லை. எனவே இந்தச் சித்தர்களெல்லாம் கிராமப்புறத்துக்குப் போனார்கள். மருந்து அவர்களுக்கு ஒரு வலிமையான ஆயுதமாக இருந்தது. ஏனென்றால் மருத்துவனுக்கு மட்டும் எந்த நேரத்திலும் எங்கும் நடக்கின்ற உரிமையைச் சமுதாயம் அளித்திருந்தது. 
எனவே மக்களுடைய ஆதரவை அவர்கள் பெற்றிருந்ததற்கு இந்த மருந்து எனும் ஆயுதம்தான் காரணம்.

      சித்தர் மரபு வளர்ந்தபோதுதான் நஞ்சை மருந்தாகப் பயன்படுத்தக்கூடிய முறை பிறந்தது.
அதற்குமுன் அது இருந்ததாகத் தெரியவில்லை சித்தர்களையும் மக்களையும் இணைத்தது மருந்து. ஆங்கிலம் தெரிந்தால் எல்லாம் தெரிந்துவிடும் என்கிற ஒரு கலாச்சாரப் போலித்தன்மை நம் முதல் எதிரி. இந்தப் போலித்தன்மையை முதலில் உடைக்க வேண்டும். இதை ஒரு வன்முறையாகக் கொண்டு வருகிறார்கள்.

நான் முதலிலேயே கூறியபடி, இந்த " பாட்டி வைத்தியம் என்ற சொல் ஒரு வன்முறை ". நம்முடைய பாரம்பரியமான வேர்களை எல்லாம் அழித்தால்தான் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதையும் சந்தைப்படுத்த முடியும். எனவே ஆங்கில மருத்துவம் வருகிறபோதே அதிகாரத்தோடு வருகிறது.  இந்த ஆங்கில மருத்துவம், சித்தமருத்துவம் முறையை  மிதிக்கின்ற மருத்துவ முறையாகும்.

 "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று மற்றிந்தார் கூற்றே மருந்து"
என்பது வள்ளுவர் கண்ட மருத்துவ நெறியாகும். நோயாளி மதிக்கப்பட வேண்டியவர். நோயாளிகளிடமிருந்து மருத்துவர் கற்றுக்கொள்ளக்கூடிய விசயங்களும் உண்டு. ஆங்கில மருத்துவம் நடைமுறையில் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

இயல்பான நிகழ்வுகளை, இல்லாத நோய்களை எல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்.    எப்படி......?
பிரசவம் ஓர் இயல்பான நிகழ்வு. கருக்கொண்டிருக்கிற பெண்ணை ஓர் ஆங்கில மருத்துவரிடம் அழைத்துப்போனால் அந்தப் பெண்ணை மருத்துவர் ஒரு நோயாளியாகப் பார்க்கிறார். அப்படித்தான் அந்த மருத்துவ முறை, ( European Epistemology )
அவருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவரை அறியாமலேயே அந்த மருத்துவ முறைக்கு அடிமையாய் இருக்கிறார். கருக்கொண்ட பெண்ணை நோயாளியாகப் பார்ப்பது மாபெரும் தவறு. 



இயற்கை முறையில்  விளைவிக்கப்பட்ட நஞ்சில்லா உணவுகளை உண்டு,  நலமோடு வாழ்வோம்,  நீண்ட ஆயுலை பெறுவோம்...........


                       நன்றி................

0 Response to "நமது பண்பாட்டில் மருத்துவம்"

கருத்துரையிடுக